ad b

விண்டோஸ் 8 பாதுகாப்பு

மைக்ரோசாப்ட் இதுவரை வழங்கியுள்ள விண்டோஸ் ஆப்பரேட்டிங் சிஸ்டங்களில், விஸ்டா அளவிற்கு வாடிக்கையாளர்களின் வெறுப்பைப் பெற வில்லை என்றாலும், விண்டோஸ் 8 அதிக ஆதரவினைப் பெறவில்லை என்பதுவும் உண்மையே. ஆனால், வேறு பல விஷயங்களில் விண்டோஸ் 8, மற்ற முந்தைய சிஸ்டங்கள் அனைத்தையும் விஞ்சி இயங்குகிறது. 

இயங்குவதற்கு வேகமாகத் தயாராகும் தன்மை, க்ளவ்ட் கம்ப்யூட்டிங் வழியாக ஒன் ட்ரைவ் இணைந்த செயல்பாடு, அதன் அப்ளிகேஷன் ஸ்டோரில் வேகமாக அதிகரித்து வரும் புரோகிராம்களின் எண்ணிக்கை ஆகியன இன்று பலரின் பாராட்டுதல்களைப் பெற்று வருகிறது. இருப்பினும், ஒரு அம்சத்தில் மற்ற முந்தைய விண்டோஸ் பதிப்புகளைக் காட்டிலும் மிகச் சிறப்பாக விண்டோஸ் 8 வடிவமைக்கப்பட்டுள்ளது. அது சிஸ்டம் இயக்கத்திற்கான பாதுகாப்பு வளையங்களை அமைப்பதுதான். விண்டோஸ் இயக்க முறைமையைப் பொறுத்தவரை, அதில் எப்போதும் ஏதாவது குறியீட்டு பிழை கண்டறியப்பட்டுக் கொண்டே இருக்கப்படும். அதற்கான தீர்வு தரும் பைல்கள் வழங்குவதை மைக்ரோசாப்ட் தொடர் பணியாகவே செயல்படுத்தி வருகிறது. விண்டோஸ் 8 மிக அதிகமான பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டு இந்த பயத்தினை வாடிக்கையாளர்களிடமிருந்து நீக்கியுள்ளது. அவற்றை இங்கு காணலாம்.
பாதுகாப்பினைப் பொறுத்தவரை, இந்த சிஸ்டம் தான், மிக அதிக கூடுதல் பாதுகாப்பு கவசங்களோடு இயங்குகிறது.
பாதுகாப்பான இயக்க தொடக்கம் (Secure Boot): பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு இணைந்து Secure Boot என்ற ஒரு வரையறையை வகுத்துள்ளது. இதனைக் கொண்டுள்ள ஓர் ஆப்பரேட்டிங் சிஸ்டம், வழக்கமான BIOS அமைப்பு இல்லாமல், கம்ப்யூட்டரிலேயே அமைக்கப்பட்ட UEFI firmware சிஸ்டத்தை இயக்கும். இதில் இந்த அமைப்பு சான்றளிக்கப்பட்ட பாதுகாப்பு கொண்ட ஆப்பரேட்டிங் சிஸ்டம் மட்டுமே இயங்கும். இதனால், பயாஸ் அமைப்பில் அமர்ந்து கொண்டு இயங்கிய ரூட் கிட் போன்ற கொடிய வைரஸ்கள் இயங்குவது தொடக்கத்திலேயே தடுக்கப்படுகிறது. விண்டோஸ் 8 இதனை அனைத்து அம்சங்களிலும் கொண்டதாக அமைக்கப்பட்டுள்ளது. இது குறித்து மேலும் அறிய http://www.makeuseof.com/tag/whatisuefiandhowdoesitkeepyoumoresecure/ என்ற இணைய தளப் பக்கத்தில் உள்ள தகவல்களைப் படிக்கவும். 
மால்வேரைக் கட்டுப்படுத்தும் முதல் இயக்கம் (Early Launch Anti Malware (ELAM)): இது முதலில் சொல்லப்பட்ட Secure Boot பெர்சனல் கம்ப்யூட்டர் தயாரிப்பாளர்கள் அமைப்பு வழிமுறையின் ஓர் அங்கமே. இது முதலில் இயங்கி தன் சோதனையை மேற்கொள்ளும். கம்ப்யூட்டர் சிஸ்டம் இயங்கத் தொடங்கும்போது, விண்டோஸ் சிஸ்டத்துடன் இணைந்து தரப்படாமல், இயங்கத் தொடங்கும் அப்ளிகேஷன்களை இது சோதனை செய்திடும். சோதனையின் முடிவில், இயங்கப் போகும் விண்டோஸ் இயக்கத்தில் இல்லாத மற்ற அப்ளிகேஷன்கள் எப்படிப்பட்டவை என சிஸ்டம் கெர்னலுக்குத் தெரிவிக்கும். அவற்றை ‘good’, ‘bad’, ‘bad but boot critical’ மற்றும் ‘unknown’ என வகைப்படுத்திக் குறிப்பிட்டு அறிவிக்கும். ‘bad’ என அறியப்பட்டவை அல்லாத மற்ற ட்ரைவர்கள் மட்டுமே கெர்னல் சிஸ்டத்தில் ஏற்றும்.
ஸ்மார்ட் ஸ்கிரீன்: இன்டர்நெட் எக்ஸ்புளோரர் தொகுப்பு 9ல் இந்த Smart Screen பாதுகாப்பு தொழில் நுட்பத்தினை மைக்ரோசாப்ட் அறிமுகப்படுத்தியது. தற்போது அனைத்து EXE பைல்களையும் உள்ளடக்கிச் செயல்படும் வகையில் இது விண்டோஸ் 8 சிஸ்டத்தில் இணைக்கப்பட்டுள்ளது. பாதுகாப்பான இயக்கத்திற்கு தீங்கு விளைவிக்கும் வகையில், இணையத்தில் இருந்து இறங்கும் கெடுதல் விளைவிக்கும் புரோகிராம்களை இது தடுக்கிறது. இது மூன்று வழிகளில் செயல்படுகிறது. முதலாவதாக, பிரபலமான நிறுவன இணைய தளங்கள் போல, போலியாக இயங்கும் தளங்களைக் கண்டறிந்து பாதுகாப்பு கொடுக்கும் antiphishing protection. நம் யூசர் நேம், பாஸ்வேர்ட், இணைய வழி மேற்கொள்ளப்பட்ட வர்த்தக தகவல்கள் போன்றவற்றைப் பெறும் தளங்களை இது அடையாளங் கண்டு தடுக்கும். இரண்டாவதாக, ஏற்கனவே கண்டு கொள்ளப்பட்ட நல்ல பைல்கள் குறித்து தேவையற்ற எச்சரிக்கைகளை இது நீக்கும். 
மூன்றாவதாக, turnkey தீர்வு. மோசமான சாப்ட்வேர் அப்ளிகேஷன்களை இது தடுக்கும். EXE பைலின் checksum கண்டறிந்து, மைக்ரோசாப்ட் தளத்தில் ஏற்கனவே கண்டறிந்து பதியப்பட்டுள்ள, நல்ல மற்றும் மோசமான அப்ளிகேஷன்களின் checksum தகவலோடு ஒப்பிட்டுப் பார்க்கும். சரியில்லை என்றால், உடனே, பயனாளர்களுக்கு விண்டோஸ் எச்சரிக்கை ஒன்றை வழங்கும். 
இந்த SmartScreen தொழில் நுட்பத்தில் இன்னொரு விரும்பத்தகாத விளைவும் உள்ளது. தொடர்ந்து இணையத்தைப் பயன்படுத்துகையில், இந்த தொழில் நுட்பம் அடிக்கடி எச்சரிக்கையைத் தந்து கொண்டே இருக்கும். சிலர், “”இந்த அப்ளிகேஷன் நாம் எல்லாம் நல்லவை என அறிந்ததுதானே; ஏன் இப்படி எச்சரிக்கை தருகிறதுஎன எரிச்சல் படலாம். இவர்களுக்காகவே, விண்டோஸ் இதனை இயக்கத்தினை நிறுத்தி வைத்திடும் வசதியையும் அளிக்கிறது. இதற்கு ‘Control Panel’ சென்று அதில் ‘Action Centre’ என்பதில் கிளிக் செய்திடவும். இங்கு இடது பக்கப் பிரிவில் உள்ளவற்றில் ‘Change Windows SmartScreen settings’ என்பதைத் தேர்ந்தெடுக்கவும். இனி கிடைக்கும் மெனுவில், ‘Don’t do anything (turn off Windows SmartScreen)’ என்பதன் முன்னால், டிக் அடையாளத்தினை அமைக்கவும். பின் ஓகே கிளிக் செய்து வெளியேறவும்.
விண்டோஸ் டிபண்டர் (Windows Defender): விண்டோஸ் 8 சிஸ்டத்தில், மைக்ரோசாப்ட், தன்னால் உருவாக்கப்பட்ட விண்டோஸ் டிபண்டர் என்னும் ஆண்ட்டி வைரஸ் மற்றும் மால்வேர் தொகுப்பினை இணைத்துத் தந்துள்ளது. இது மற்ற நிறுவனங்களின் ஆண்ட்டி வைரஸ் தொகுப்பு அளவிற்கு மிகவும் உஷாராகச் செயல்படவில்லை என்றாலும், இத்தகைய பாதுகாப்பு முதல் முதலாக விண்டோஸ் 8 சிஸ்டத்துடன் மட்டுமே தரப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. எப்போதாவது இணையத்தைப் பயன்படுத்துபவர்களுக்கு, இந்த விண்டோஸ் டிபண்டர் போதுமானது என இதனை ஆய்வு செய்தவர்கள் அறிவித்துள்ளனர்.
டைனமிக் அக்செஸ் கண்ட்ரோல் (Dynamic Access Control (DAC)): டேட்டா நிர்வாகம் மேற்கொள்ள இந்த டூலினை விண்டோஸ் சர்வர் 2012 மற்றும் விண்டோஸ் 8 சிஸ்டங்களில், மைக்ரோசாப்ட் தந்துள்ளது. கம்ப்யூட்டர் கட்டமைப்பில் பதியப்படும் டேட்டாவினை, அதனை நிர்வகிப்பவர்கள், பயனாளர்களுக்கு அனுமதி வழங்குவதில் வரையறைகளை அமைக்க இது உதவுகிறது. இதன் மூலம் நிறுவனங்களில், அத்தாட்சி பெற்ற பயனாளர்கள் மட்டுமே, குறிப்பிட்ட போல்டர்களை அணுகி டேட்டாவினைப் பெற முடியும். இதற்கு முன் வந்த விண்டோஸ் இயக்க முறைமைகளில் இது தரப்படவில்லை.
விண்டோஸ் டு கோ (Windows To Go): இந்த தொழில் நுட்பத்தின் மூலம், பெரிய அளவில் ஸ்டோரேஜ் கொண்டுள்ள ப்ளாஷ் ட்ரைவ் மற்றும் எக்ஸ்டர்னல் ஹார்ட் ட்ரைவ் மூலம் விண்டோஸ் சிஸ்டத்தினை இயக்கலாம். இது நிறுவனங்களின் செயல்பாட்டில் அதிக நன்மையைத் தரும். இதன் மூலம், நிறுவனங்களின் கம்ப்யூட்டர்களைப் பயன்படுத்துபவர்களுக்கு, நிறுவனங்கள் இது போன்ற ட்ரைவ்களைத் தந்து, அதன் மூலம் கம்ப்யூட்டர்களை இயக்கும் பாதுகாப்பான வசதியைத் தர முடியும். விண்டோஸ் டு கோ பயன்படுத்துகையில், அதில் தரப்பட்டுள்ள அனுமதிக்கப்பட்ட டேட்டா போல்டர்களை மட்டுமே அந்த பயனாளர் பெற முடியும். பயனாளர்கள் தங்கள் லேப்டாப் வழியாக, நிறுவனத்தின் நெட்வொர்க்கில் இணைந்து செயல்படுகையில், இது பாதுகாப்பினைத் தரும்.
மேலே தரப்பட்டுள்ளவை அனைத்தும், மைக்ரோசாப்ட் நிறுவனம் தன் விண்டோஸ் 8 இயக்க முறைமையில் அனைத்து பாதுகாப்பு வளையங்களையும் அமைப்பதில் எதனையும் விட்டுவைக்கவில்லை. கூடுமானவரை அதிகப்படியான பாதுகாப்பு முறைகளை வடிவமைத்துத் தந்துள்ளது என்பது விளங்கும்.