ad b

உங்கள் கணினியில் வைரஸ் உள்ளதா

இன்றைய கம்ப்யூட்டர் பயன்பாட்டில், ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள் நமக்கு ஒரு நிம்மதியான மனநிலையைத் தந்தாலும், எந்த நேரத்தில், எப்படிப்பட்ட வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் கம்ப்யூட்டருக்குள் வந்துவிடுமோ என்ற பயத்தில் தான், நாம் கம்ப்யூட்டரை இயக்குகிறோம். 




சில வேளைகளில் ஒருவேளை வந்துவிட்டதோ என்ற அச்சமும் நம்மிடம் உள்ளது. இணைய இணைப்பு உடனடியாகக் கிடைக்காவிட்டால், திடீரென மவுஸின் கர்சர் மேலும் கீழுமாகச் சென்றால், அய்யோ! இது வைரஸின் வேலையாக இருக்குமோ என்று சந்தேக அச்சத்துடன் கம்ப்யூட்டரை இயக்குகிறோம்.
பொதுவாக, அனைத்து ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்களும், கம்ப்யூட்டரின் செயல்பாடு எப்படி மேற்கொள்ளப்பட்டு இயக்கப்படுகிறது என்பதனை கண்காணித்துக் கொண்டுதான் இருக்கும். கம்ப்யூட்டரின் செயல்பாட்டில் ஏதேனும் வித்தியாசமாகத் தென்பட்டால், அது உடனே சோதனை செய்து, சார்ந்த சர்வருக்கு, அது குறித்த செய்தி அனுப்பி, மால்வேர் இருப்பதனை, இயங்குவதனை உறுதி செய்து, நமக்கு தகவல் தெரியப்படுத்தும். அதனை அழிக்க முடியும் எனில், உடனே அழித்துவிடும்.
கம்ப்யூட்டரில் இயங்கும் புரோகிராம் செயல்பாடுகளை ஆங்கிலத்தில் heuristics என அழைக்கிறார்கள். இவற்றில் சற்று மாற்றம் இருந்தாலும், உடனே அவை மால்வேர் புரோகிராம்களுக்கு எதிரான புரோகிராம்களின் நேரடி கண்காணிப்பிற்கு வருகின்றன. மற்ற ஆண்ட்டி வைரஸ் புரோகிராம்கள், இதனைக் கண்டறிய, சிஸ்டம் நடவடிக்கை கண்காணிப்பு, தானே உருவாக்கப்படும் சூழ்நிலைகள் (Virtualized environments), நெட்வொர்க் சந்தடி ஆகியவற்றை தனித்தனியாகவும், அல்லது மொத்தமாகவும் பயன்படுத்திக் கண்காணிக்கின்றன. இருந்தாலும், சில நேரங்களில், இந்த கண்காணிப்புகளையும் மீறி, மால்வேர் அல்லது வைரஸ்கள் கம்ப்யூட்டர்களைக் கைப்பற்றுகின்றன. இந்தச் சூழ்நிலையில், நாமே, சில செயல்பாடுகளின் அடிப்படையில், நம் கம்ப்யூட்டரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம்கள் வந்துவிட்டன என்று அறிய முடியாதா? என நீங்கள் எதிர்பார்க்கலாம். இந்த கேள்விக்குப் பதில் அளிக்கும் வகையில், இங்கு, உங்கள் கம்ப்யூட்டரில் உறுதியாக மால்வேர் அல்லது வைரஸ் வந்துவிட்டது என்பதனைத் தெரியப்படுத்தும் சில செயல்பாடுகளை இங்கு காணலாம்.
அப்படிப்பட்ட நேரத்தில், என்ன மாதிரி தீர்வு நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்பதனையும் இங்கு விவாதிக்கலாம்.

போலியான ஆண்ட்டி வைரஸ் செய்திகள் (fake antivirus warning messages): உங்களுடைய கம்ப்யூட்டரை வைரஸ் பாதித்து விட்டதாகவும், கம்ப்யூட்டரை ஸ்கேன் செய்திடலாமா என்பது போன்ற செய்தி வந்தால், நாம் புத்திசாலித்தனமாக வேண்டாம் (No or Cancel) என்ற முடிவை எடுப்போம். ஆனால், இந்த செய்தி வந்தாலே, உங்கள் கம்ப்யூட்டரில் மால்வேர் அல்லது வைரஸ் வந்துவிட்டது என்று பொருள். இவை பொதுவாக, ஜாவா இயக்க சூழ்நிலை அல்லது அடோப் நிறுவனத்தின் புரோகிராம் ஒன்றின் மூலம் வந்திருக்கும். பின் ஏன் இந்த போலியான வைரஸ் எச்சரிக்கை செய்தி என்று எண்ணுகிறீர்களா? ஏனென்றால், இந்த செய்திக்கு ஆம் என்று முடிவு செய்து, கம்ப்யூட்டரில் ஒரு போலியான தேடலுக்கு (scan) அனுமதி அளித்துவிட்டால், சிறிது நேரம் கழித்து, உங்கள் கம்ப்யூட்டரில் டன் கணக்கில் வைரஸ் உள்ளதாக அறிவிப்பு வரும். உடனே, ஏன், இந்த ஆண்ட்டி வைரஸ் புரோகிராமினை நீங்கள் வாங்கக் கூடாது என ஒரு நிறுவனத்தின் விளம்பரம் தரப்படும். உங்களிடமிருந்து பணம் பறிக்கப்பட்டு, போலியான புரோகிராம் ஒன்று நிறுவப்படும். அத்துடன் மட்டுமல்லாது, உங்களுடைய கிரெடிட் கார்ட் எண், பாஸ்வேர்ட், யூசர் நேம் என அனைத்து பெர்சனல் தகவல்களும் திருடப்பட்டு, வைரஸை அனுப்பியவருக்கு கடத்தப்படும்.
இது போன்ற ஒரு செய்தி கிடைத்தால், உங்கள் கம்ப்யூட்டரை உடனடியாக ஷட் டவுண் செய்திடவும். அடுத்து, கம்ப்யூட்டரை சேப் மோடில், பாதுகாப்பான நிலையில் (Safe Mode) இயக்கவும். நெட்வொர்க் இணைப்பினை, இணைய இணைப்பினை நிறுத்தவும். கம்ப்யூட்டர் இயங்கத் தொடங்கியவுடன், முதல் வேலையாக, அண்மையில் இன்ஸ்டால் செய்த புரோகிராமினை அன் இன்ஸ்டால் செய்து நீக்கவும். பின்னர், கம்ப்யூட்டர் முழுவதும், உங்களிடம் உள்ள ஆண்ட்டி வைரஸ் கொண்டு சோதனை செய்து பார்க்கவும்.
தேவையற்ற பிரவுசர் டூல்பார்கள்: சில வேளைகளில், நம் பிரவுசரின் முகப்பு தோற்றத்தில், பல டூல்பார்கள் திடீரென தோற்றமளிக்கும். அல்லது, இதனை வைத்துக் கொள்ளலாமே என்று செய்தி வரும். இந்த டூல்பார்கள், நல்ல நிறுவனத்திலிருந்து வந்ததனை உறுதிப்படுத்திக் கொண்டு, தேவை இருந்தால் மட்டுமே பயன்படுத்தவும். இல்லை எனில், உடனே நீக்கிவிடவும். நீக்கிவிட்டு, நிலை 1ல் விவரித்துள்ள நடவடிக்கையினை எடுக்கவும்.
மாற்றி அழைத்துச் செல்லும் தேடல்கள்: சில வேளைகளில், நாம் சில தகவல்களைத் தேடுகையில், தொடர்பற்ற சில தளங்களுக்கான லிங்க் கிடைக்கும். அவற்றில் கிளிக் செய்து, நாம் தேவையற்ற தளங்களுக்கு அழைத்துச் செல்லப்படுவோம். இதனை அறிய, சில பொதுவான சொற்களை தேடலுக்குப் பயன்படுத்தி, அவை காட்டும் தளங்களைக் குறித்து வைத்துக் கொள்ள வேண்டும். பின் நாளில், இதுபோல வைரஸ் புரோகிராமினால், தேவையற்ற தளங்களுக்கு இழுத்துச் செல்லப்படுகையில், அதே சொற்களைக் கொடுத்து, முடிவுகள் முன்பு போலவே உள்ளனவா என்பதனைப் பார்க்க வேண்டும். இல்லாமல், தேவையற்ற புதிய தளங்கள் காட்டப்பட்டால், நிச்சயம் உங்கள் கம்ப்யூட்டரில் வைரஸ் அல்லது மால்வேர் புரோகிராம் வந்துவிட்டது என்று பொருள். இந்நிலையில், பிரவுசருக்கான டூல்பார்களை நீக்கி, நிலை 2 மற்றும் 1ல் பரிந்துரைக்கப்பட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
அடிக்கடி எழும் பாப் அப் செய்திகள்: கம்ப்யூட்டரில் நாம் செயல்பட்டுக் கொண்டிருக்கையில், திடீர் திடீரென பாப் அப் செய்திகள், அவை உண்மையானவை போலக் காட்டப்படும். அப்படிப்பட்டவற்றைப் பெறும் நிலையில், முன்பு கூறியது போல, டூல்பார்கள் மற்றும் புதிதாக இன்ஸ்டால் செய்த புரோகிராம்களை நீக்கி, தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்ளவும்.
5. உங்கள் மின் அஞ்சல் முகவரியிலிருந்து, நண்பர்களுக்குப் போலியான அஞ்சல் செய்திகள்: உங்கள் நண்பர்கள் உங்களை அழைத்து, அல்லது அஞ்சல் மூலம், உங்கள் அஞ்சலிலிருந்து போலியான செய்திகள் வந்துள்ளன என்று கூறினால், கம்ப்யூட்டரில் மால்வேர் புரோகிராம் உள்ளது உறுதியாகிறது. உடனே, போலியான டூல்பார் மற்றும் புரோகிராம்களைச் சோதனை செய்து நடவடிக்கை எடுக்கவும்.

இணைய பாஸ்வேர்டில் மாற்றம்: சில வேளைகளில், உங்களுக்கு இணைய சேவை வழங்கும் நிறுவனத்திடமிருந்து சில காரணங்களைக் குறிப்பிட்டு, உங்கள் பாஸ்வேர்டை மாற்றிக் கொள்ளும்படியான செய்தி கிடைக்கும். நாமும் அதனை உண்மை என்று நம்பி, பழைய பாஸ்வேர்டினை, அந்த செய்தி அழைக்கும் போலியான தளம் சென்று வழங்கிவிட்டு, புதிய பாஸ்வேர்டை அமைப்போம். அதன் பின்னர், புதிய பாஸ்வேர்ட், பழைய பாஸ்வேர்ட் என எதுவும் ஒழுங்காக இயங்காது. நம்மிடம் உள்ள நம் தனி நபர் தகவல்கள் திருடப்பட்டு, நம் பணம் பறிபோகும். இப்படிப்பட்ட வேளைகளில், உடனடியாக அதுவரை பயன்படுத்தி வந்துள்ள பாஸ்வேர்டினை உடனடியாக மாற்றி அமைக்கவும்.
எதிர்பாராத சாப்ட்வேர் பதிவு: நாம் எதிர்பார்க்காமலேயே, சில வேளைகளில், புதிய சாப்ட்வேர் தொகுப்புகள் நம் கம்ப்யூட்டரில் பதியப்படும். அப்படி ஏற்பட்டிருந்தால், உங்கள் கம்ப்யூட்டர் முழுமையாக கைப்பற்றப்பட்டுவிட்டது என்று உறுதியாக நம்பலாம். இந்தச் சூழ்நிலையில், உங்கள் கம்ப்யூட்டரில், சரியான முறையில் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம்களை மட்டும் அடையாளம் காட்டும் புரோகிராம்களை இயக்கி, நம்மை அறியாமல் உள்ள புரோகிராம்களைக் கண்டறிந்து அவற்றை நீக்குங்கள். இந்த வகையில், விண்டோஸ் சிஸ்டத்திற்கு உதவும் புரோகிராம்களில் ஆட்டோ ரன்ஸ் (Autoruns) என்ற புரோகிராம் மிகவும் சிறப்பாகச் செயல்படுகிறது. இதனைhttp://technet.microsoft.com/enus/sysinternals/bb963902 என்ற முகவரியில் உள்ள இணையப்பக்கத்திலிருந்து பெறலாம். இந்த புரோகிராம், உங்கள் கம்ப்யூட்டர் இயங்குகையில், தாமாகவே இயங்கும், உங்களுக்குத் தெரியாமல் இன்ஸ்டால் செய்யப்பட்ட புரோகிராம் களைக் காட்டிக் கொடுக்கும். அவற்றை முழுமையாக நீக்கிவிடலாம்.
தானாக இயங்கி புரோகிராம்களைத் தேர்ந்தெடுக்கும் மவுஸ் கர்சர்: நீங்கள் புரோகிராம்களைத் தேடுகையில், உங்கள் மவுஸ் கர்சர் தானாக நகர்ந்து சென்று, வேறு ஒரு புரோகிராமினைத் தானாகத் தேர்ந்தெடுத்து இயக்கும் வகையில் செயல்படுகிறதா? நிச்சயமாக உங்கள் கம்ப்யூட்டர் கைப்பற்றப்பட்டுள்ளது என்று பொருள். சில வேளைகளில், ஹார்ட்வேர் பிரச்னையால், மவுஸ் கர்சர் அங்கும் இங்குமாக அலையலாம். ஆனால், மேலே கூறிய செயல்பாடு இருப்பின், நாம் வைரஸ் இருப்பதை உறுதியாக நம்பலாம். இது மிக அபாயகரமான வைரஸ் ஆகும். நீங்கள் கம்ப்யூட்டரைச் சற்று நேரம் இயங்காமல் வைத்துவிட்டால், தானாகவே இயங்கி, உங்கள் வங்கிக் கணக்கிலிருந்து பணத்தை மாற்றும். ஷேர்களை அடுத்தவருக்கு விற்பனை செய்து, பணத்தை இன்னொரு அக்கவுண்டிற்குக் கொண்டு செல்லும். இது போன்ற நேரத்தில், இன்னொரு கம்ப்யூட்டர் மூலம், உங்கள் யூசர்நேம், பாஸ்வேர்ட்களை அனைத்து இடத்திலும் மாற்றிவிடவும்.
இயக்க முடியாத ஆண்ட்டி வைரஸ் புரோகிராம், டாஸ்க் மானேஜர் மற்றும் ரெஜிஸ்ட்ரி எடிட்டர்: சில வேளைகளில், நம் ஆண்ட்டி வைரஸ் புரோகிராம் மற்றும் டாஸ்க் மானேஜர் புரோகிராம்களை இயக்க முடியாது. ரெஜிஸ்ட்ரி எடிட்டரைத் திறக்க முடியாது. இந்த சூழ்நிலைகள் ஏற்பட்டால், நிச்சயமாக வைரஸ் கம்ப்யூட்டரைக் கைப்பற்றிவிட்டது என நம்பலாம். இத்தகைய விளைவு களை ஏற்படுத்தும் மால்வேர் பரவலாகப் பரவி வருகின்றன. இப்படிப்பட்ட சூழ்நிலையில், சிஸ்டம் ரெஸ்டோர் பயன்படுத்தி, கம்ப்யூட்டரை முன்பு ஒரு நாள் இருந்த நிலைக்குக் கொண்டு செல்ல வேண்டும். அப்போது, அந்தக் கால இடைவெளியில் நம் கம்ப்யூட்டருக்கு வைரஸைக் கொண்டு வந்த அல்லது வைரஸாக வந்த புரோகிராம் நீக்கப்பட்டுவிடும்.
வங்கிக் கணக்கில் பணம் திருட்டு: உங்கள் வங்கிக் கணக்கில், உங்களுக்குத் தெரியாமல், திடீரென பணம் எடுக்கப் பட்டுள்ளதா? இப்போது வங்கிக் கணக்குகள் அனைத்துமே டிஜிட்டல் வழிகளில் மேற்கொள்ளப்படுகின்றன. அதே வழிகளில், வைரஸ் புரோகிராம்களை அனுப்பியவர்கள், நம் கம்ப்யூட்டர் வழியாக வங்கிக் கணக்கு விபரங்களைத் தெரிந்து கொண்டு, பணத்தை தங்களின் தற்காலிக வங்கிக் கணக்குகளுக்கு மாற்றிக் கொள்கின்றனர். பல வங்கிகள் இது போன்ற மோசடிகளுக்கு இழப்பீடுகளைத் தந்தாலும், நாம் கூடுதல் கவனத்துடன் இயங்க வேண்டும். வங்கிகள் தரும் இரட்டைப் பாதுகாப்பு முறையினைப் பயன்படுத்த வேண்டும். பணம் எடுக்கப்படும்போது, தரப்படும் டெக்ஸ்ட் அலர்ட் முறையைப் பின்பற்ற வேண்டும்.
மேலே காணப்பட்ட நிகழ்வுகள் எப்போது ஏற்பட்டாலும், உடனடியாக செயலில் இறங்கி, பதட்டப்படாமல், தீர்வுக்கான வழிகளை மேற்கொள்ள வேண்டும். முன்னதாகவே, பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது, இது போன்ற நிகழ்வுகளில் நாம் சிக்கிக் கொள்வதனைத் தடுக்கும்.