என்னதான் எச்சரிக்கை இருந்தாலும், எந்த பயமும்
தயக்கமும் இல்லாமல், விண்டோஸ் எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினைப் பயன்படுத்துபவர்கள்
இன்னும் தொடர்கிறார்கள். ஆண்ட்டி வைரஸ் நிறுவனமான, AVAST, எக்ஸ்பி
பயன்படுத்தும் தன் வாடிக்கையாளர்களிடையே ஓர் ஆய்வு நடத்தி, சில தகவல்களைப்
பெற்றுள்ளது.
தொடர்ந்து எக்ஸ்பி பயன்படுத்தும் தன்
வாடிக்கையாளர்களில், 15% பேர், தங்களுடைய ஆப்பரேட்டிங் சிஸ்டத்தினை மாற்றிக் கொண்டு உயர்த்த
இருப்பதாகத் தெரிவித்துள்ளனர். ஆனால், புதிய கம்ப்யூட்டர் வாங்க இருப்பதாகச்
சொன்னவர்கள் 5% பேர் மட்டுமே. இவர்களில் 27% பேர், எந்த அச்சமும் இல்லாமல், எங்களிடம்
மாற்றத்திற்கான எண்ணம் எதுவும் இல்லை என்று தெரிவித்ததுடன், அவாஸ்ட் ஆண்ட்டி
வைரஸ் புரோகிராம் தங்களைக் காப்பாற்றும் என அறிவித்துள்ளனர்.
இது குறித்து அவாஸ்ட்
குறிப்பிடுகையில், எக்ஸ்பி ஆப்பரேட்டிங் சிஸ்டத்தைப் பாதுகாப்பதில், அதிக பட்சம் தங்கள்
நிறுவனம் பாடுபடும் என்று அறிவித்தது. இருப்பினும், தங்கள் பிடிவாத வாடிக்கையாளர்களிடம், புதிய ஆப்பரேட்டிங்
சிஸ்டத்திற்கு மாறுமாறு கேட்டுக் கொண்டுள்ளது. அத்துடன், இணைய உலாவிற்கு
இன்டர்நெட் எக்ஸ்புளோரர் பிரவுசரைப் பயன்படுத்துவதனை, உடனே
நிறுத்துபடியும் கேட்டுக் கொண்டுள்ளது.